Sunday, October 31, 2010

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்...

இன்று தினமலர்.காம்-ல் பின்வரும் செய்தியைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகின் 10 ரியல் ஹீரோக்களில் தமிழ் நாட்டைச்  சேர்ந்த ஒருவரும் உள்ளார் என்றதும் என்ன என்று  பார்த்தேன். உண்மையில் பெரிய சந்தோஷமாக உள்ளது. வள்ளலார் பாடியது போல், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்', என்ற வரிகளுக்கேற்ப, மன நலமற்று, பிற சூழ்நிலைகளில் உறவுகளை விட்டு அனாதைகளாய் சுற்றித் திரிவோர்களுக்கும் வயிறு என்று ஒன்றிருக்கிறது என்பதை உணர்ந்து தனக்கும் வள்ளலார் மனம் இருக்கிறது என்பதை இவ்வுலகிற்கு அறிவுறுத்தும் விதமாக  செயல்பட்டிருக்கிறார் இந்த நண்பர். நல்லுள்ளம் கொண்டோர்கள் நிச்சயம் வாழ்த்துவார்கள்.

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


CNN இணையப்பக்கத்தில் நாராயணன் கிருஷ்ணனைப் பற்றி அறிய விரும்புவோர் பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
நாராயணன் கிருஷ்ணன்